Thursday 2 June 2011

அஞ்சலி...


அடிமை வம்சத்திலோர்
அசாகாய வீரன் பிறந்து!
அனைவரையும் மீட்டெடுத்தால்
அளவில்லா ஆனந்தம் கொள்கிறோம்...

...கொடுமைக்கு எதிராய் - மக்கள்
கூடி வந்து போராடி!
விடுதலை அடைகையில்
வாய் பிளந்து பார்க்கிறோம்...

எகிப்து, லிபியா என
எங்கு நடந்தாலும் - நம்
ஏகோபித்த ஆதரவை
இங்கிருந்தே தருகிறோம்...

இலங்கையில் நடந்ததே - ஓர்
இனப்படுகொலை!
அது என்ன வகையென்று
அனைவரும் அமைதிகாத்தோம்?

பார்த்தோம்!
பதபதைத்தோம்!!
பக்கம் பக்கமாய் எழுதினோம் - ஆனால்
போராட தயங்குவதேன்?

அகமும் புறமும் - உலகுக்கு
அளந்து சொன்னவன் தமிழன்...
அழுவதைத் தவிர - இன்று
அவனுக்கேதும் தெரியவில்லையோ?

ஆழ்கடலில் ஏதுமின்றி
தத்தளிக்கும் ஒருவனுக்கு...
வாழ்வளிக்க வந்த துடுப்பே - நமக்கு
இந்த ஐநா குழு அறிக்கை...

இனியும் ஏன் மௌனம்?
போராட கூட வேண்டாம்...
அமைதியாய் நம் உணர்வை
உலகுக்கு எடுத்துரைப்போம்...

இலங்கையில் இணப்
படுகொலை செய்யப்பட்ட
1,46,000 தமிழர்களுக்காக
அமைதியாய் - ஓர் அஞ்சலி...

தமிழர்கள் அனைவரும்
தவறாது கலந்துகொள்ள
வேண்டுமென்று...
தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...

இடம்: மெரீனா கடற்கரை.
நாள்: 26 சூன் 2011.
நேரம்: மாலை 6 மணி.
ஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்...


Wednesday 20 April 2011

குறும்படம்...


வீதியெல்லாம் பட்டாசு சத்தம்!
விண்ணதிர வாணவேடிக்கைகள்!
ஊரே கொண்டாட!
ஒருவன் மட்டும் தனித்திருந்தான்...
வழிமேல் விழிவைத்து
...இருவிழியும் பூத்திருந்தான்....

விளக்கும் வைத்தாயிற்று
வரவில்லை அப்பா...
கட்டம் போட்ட சட்டை!
கருப்பு கலர் பேன்ட்!
மத்தாப்பு பெட்டி!
மிரளவைக்கும் சரவெடி - இன்னும்
எத்தனையோ வருமென நம்பி
ஏங்கியவன் தூங்கிவிட்டான்...

பொழுதும் புலர்ந்தது
பண்டிகையும் நாளும் மலர்ந்தது....
கட்டம் போட்ட சட்டையுமில்லை
கருப்பு கலர் பெண்ட்டுமில்லை...
அப்பாமட்டும் அமர்ந்திருந்தார்
அவர் மடியில் பணமுமில்லாமல்....

அழுது புரண்டான்
அடுத்த நாள் பள்ளிக்கு
அனைத்து நண்பர்கள்;
புது துணியோடு
பள்ளிக்கூடம் வருவார்களே...
அது ஒன்றே அவன் கவலை....

புதியதைப்போல
இருந்தது ஒரு சட்டை...
பிழைத்துக்கொள்ள
பிறந்தது யோசனை....
ஊதுபத்தி துணையோடு
ஒட்டைபோட்டான் சட்டையிலே...

பட்டாசு பட்டதனால்
புதுசட்டை போனதென்று!
பள்ளியில் அனைவருக்கும்
புதியதோர் கதை சொன்னான்...

பண்டிகைகள் வந்தாலே
பாவிப் பய மக்க...
பலபேர் இப்படித்தான்
பணங்காசு இல்லாம
பிதுங்குது இருவிழியும்
பதுங்குது இல்லதுள்ளே...

பெத்ததுக்கு கூட
பொருள் சேர்க்க முடியல...
பெத்துக்காமலும்
இருக்க முடியல...

பசியிலும் பாலுணர்வு
பிறப்பது சுகமென்றாலும்?
பசியில் அழுவும்
குழந்தையைக் காண்கையில்
பெற்றோரையே வசைபாட
பலநேரம் வாய்துடிக்கும்...

இயற்கைக்கும்!
இறைவனுக்கும் கூட!!
படைப்பதில் பிழை
தவிர்க்க முடியாது போல!!!

Revolution....


இனி கரைவேட்டிகள்
கண்ணில் பட வாய்ப்பில்லை...
கதர் சட்டைக்கும்
கலர் துண்டுக்கும் வேலையில்லை...

சுழல் விளக்குகளும்
சூறாவளி பிரசாரமுமாய்
புழுதி பறக்கும் சாலையெங்கும்  
புயலென பாய்ந்த ஆட்களெல்லாம்...

பூப்படைந்த
பெண்ணைப் போலே
புகுந்து கொள்வார்
வீட்டுக்குள்ளே...

பெரியோராய், தாய்மாராய்,
பெருங்குடி மக்களாய்!!!
தென்பட்ட மக்கள் - இனி
பரதேசிபோல் புலப்படுவர்...

தேர்தலில் வெற்றி, ஆட்சியில் பங்கு;
அமைச்சர் பதவி, அளவில்லா சொத்து;
அடுத்த ஐந்தாடும்
அரங்கேறப்போவது இவைகள்தான்...

யாரேனும் ஒருவன் உண்டா?
ஓட்டு போட்ட மக்களுக்கு
உண்மையாய் உழைத்திட?
நன்மையை செய்திட?

ஓட்டு போட்ட அனைவருக்கும்
ஒன்று மட்டும் நிச்சியம் உண்டு...
ஜாதி மத வேறுபாடின்றி 
அனைவருக்கும் பெரிய நாமம்...

புரட்சி வெடிக்காமல் - இங்கு
பூபாளம் பிறக்காது...
புறமுதுகு காட்டிநின்றால் - நாளை
வரலாறு புகழாது...

ஒதுங்கியே இருந்தது போதும்...
இருந்த இடத்திலேயே
பதுங்குவோம் புலியைப்போல!
பாய்ந்திடுவோம் ஓர்நாள்!!
புதியதோர் உலகம் செய்ய!!!



Thursday 7 April 2011

தேர்தல்...


பச்சைத் தமிழனை
பிச்சைத் தமிழனாய்
கொச்சைப் படுத்திய
எச்சை கட்சிகள்...

மிச்சமுள்ள மனிதரையும்
விட்டுவைக்க மனமில்லாமல்
மூர்கத்தனமாய் தாக்குவதற்கே
மூள்கிறது - இங்கே தேர்தல் கனல்...

எத்தனை பேர் போயிருப்பார்கள்
தனது சொந்த தொகுதிக்கு?
என்னவெல்லாம் செய்திட்டார்கள்?
தன்னை நம்பிய பகுதிக்கு...

மனசாட்சியை இப்படி
மார்வாடியிடம் வைத்துவிட்டு;
மறந்துபோன தொகுதிகளை - இன்று
பறந்து வந்து பார்க்கிறார்கள்...

ஏருழுத மண்ணெல்லாம் - இன்று
ஏழடுக்கு மாளிகையாம்...
உழைத்தவன் பசித்திருக்க - இங்கே
ஊழலுக்கு விருதுகளாம்...

மறதியும் மறுவாழ்வும்
மறத்தமிழனின் மறுக்கமுடியா
தேவை என்றுணர்ந்து - இன்று
மிக்சியாம், கிரைண்டராம்!!!

கையூட்டு வாங்கிக்கொண்டால்
கரைபடியும் நம் கைகள்...
கரைவேட்டிக் காரர்களுக்கு
இதைவிட்டால் வழியில்லை...

நம்மையும் அவர்கள் செய்யும்
ஊழலில் சேர்த்துக்கொள்ள;
நயந்து சொல்வதுதான் - இந்த
நயவஞ்சக தேர்தல் அறிக்கை!!!

எலும்புத்துண்டை கொடுத்துவிட்டு
இரும்பைக்கொண்டு நாளை அடிப்பர்...
இருப்பதை காத்துக்கொள்ள
இனியாவது முயற்சி செய்வோம்!!!

விழிப்புடன் வாக்களிப்போம் - மக்களுக்கு
வழித்தடம் காட்டிடுவோம்!!!
வாக்களிப்போம்!!!
வாழ்வை மீட்ப்போம்!!!


Sunday 27 March 2011

கடமையை செய்வோம்... உரிமையை கேட்போம்...


எத்தனை மொழிகளில்
வரையறை தந்தாலும்...
மக்களாட்சிக்கு தமிழ் தந்த
பெயர் குடியரசு...

...இங்கு எவரேனும்
ஒருவர் சொல்லட்டும்

"மக்களால் மக்களுக்காக மக்களே"
செய்யும் ஆட்சி...
இங்கு நடக்கிறதா?

அவரவர் மக்களுக்காக
அவரவர் மக்களால்
அவரவர் மக்களே செய்யும் ஆட்சி...
நடைமுறையா?

சாமானியனுக்கு அரசியல்
என்பது ராகேட் சைன்ஸ் ஆகிப்போனதே...
அதற்க்கு யார் காரணம்?

கொலை செய்தவனும்
கொள்ளை அடிப்பவனும்
இந்த நாட்டை ஆள்வதுதான்
நாகரீகமா?

இளைஞர்கள் இங்கு வந்தால்
இந்தியா ஒளிரும் என்கிறீரே!!!
புது ரத்தத்திலும் - உங்கள் எண்ணம்
புரையோடி போவதற்கா?

பல்லாயிரம் கோடி
கடன்வாங்கித்தான் என் நாட்டை
வல்லரசாக்கனுமா?
வட்டிக்கு கடன்
வாங்கி - நம் தாய்க்கு
பட்டுப்புடவை கட்டனுமா?

இனியாவது தவிர்த்திடுவோம்
இது போன்ற இலவசத்தை...
இலவசங்கள் அல்ல - அவை
நம் கழுத்துக்கு நாமே போடும்
சுருக்கு கயிறு...
நம் நாட்டுக்கு நாமே தோண்டும்
ஆழ் கிணறு....
புதையுண்டால்
பிழைக்க வாய்ப்பில்லை...

அடுத்த ஐந்தாண்டுக்கு...
நம்மை ஆளப்போகும்
ஒரு சபையை;
நாட்டின் தலை எழுத்தை மாற்றப்போகும்
ஒரு அரசை தீர்மானிக்க...

இதுவே நேரம்
சிந்தித்து செயல் படுவோம்...
வாக்களிப்பது நமது உரிமை...
வாக்களிப்பது நமது கடமை....
49 - O என்பதும் ஓட்டுதான்...


Sunday 20 March 2011

யதா யதா ஹி தர்மஸ்ய.....


அநியாயங்கள்
அரங்கேறும் போதெல்லாம்
அழையா விருந்தாளியாக! 
அப்பொழுதே வந்திடுவார்...

எங்கோ நடக்கும்
கொள்ளையையும்;
கொலையையும்!
எங்கிருந்தோ வந்து தடுத்திடுவார்...

அதனையும்  மீறி
நடந்துவிட்டால்?
அன்னாரின் பழிவாங்கும் எண்ணம்
பலரது உயிர் வாங்கும்...

நாடி நரம்புகள்
புடைத்து; கோபம்
கழுத்து வழியாக
கபாலத்தை சென்றடையும்...

தீப்பிழம்பு
திரண்டு வந்து...
அவர் கண்களில் 
காட்சி தரும்...

இங்கு பிடிக்க
ஆளில்லாமல் - தீவிரவாதியை 
இங்கிலாந்து சென்று
பிடித்திடுவார்...

பக்கம் பக்கமாக
வீர வசனங்கள்...
அங்கொன்றும் இங்கொன்றுமாக
பஞ்ச் டயலாக்குகள்...

பாவம் செய்வோரை
பார்த்துவிட்டால் போதும்...
பின்னங்கால் பிடரியில் அடிக்க
விரட்டிடுவார்...

கடைசி மூச்சு உள்ளவரை...
கடமையை செய்திடுவார்...
காலன் அதற்குள் உயிர் பிரித்தால்?
மீண்டும் பிறந்து முடித்திடுவார்...

எத்தனை ஸ்டார்கள்...
எத்தனை தளபதிகள்...
எத்தனை நாயகன்கள்...
எத்தனை புயல்கள்...

வெள்ளித்திரையில் மட்டும்
வேங்கை முகம் காட்டுகின்றாரே?
இந்தியத் தாயின்
பிள்ளைகள் தவிக்கையில் இமயமலை  செல்கின்றாரோ?

அரிதாரம் பூசிக்கொண்டு 
அவதாரம் எடுக்கும்போதுதான்...
அவர்களுக்கு வீரமும்
தியாகமும் வரும் போல!!!

நடந்து முடிந்த
அக்கிரமங்களுக்கு பழிவாங்கவும்...
நடந்துகொண்டிருக்கும்
அத்தனை கொடுமைக்கும் விடை காணவும்...
நடக்கப் போகும்
அழிவுகளை தடுக்கவும்...
ஒரு நாயகனும் வருவதில்லை...

பொருள் ஈட்டவும் - தங்கள்
துதி பாடவும் மட்டும்; அவர்களுக்கு
தமிழன் வேண்டும்...
தமிழ்நாடு வேண்டும்...

தெளிவான கொள்கை...
உயர்ந்த நோக்கம்...

தமிழன் தன்னிலை
அறியும் வரை!
தொடரும் இவர்கள்
தெருக்கூத்து...

தெளிவோம்...
துணிவோம்...
தொடர்வோம்...

Monday 14 March 2011

Miss you my friend...

நீண்ட நாட்களாக
நீங்காத சந்தேகமொன்று!!!
அண்மையில் தான்
அறிந்துகொண்டேன்...

நள்ளிரவு நேரமது
சர சரவென
சத்தம் கேட்கும்...
திடுதிப்பென
தூக்கம் களைந்து பார்த்தால்?
சத்தம் நின்றுவிடும்...

வீட்டில்
மீன் குழம்பு;
கருவாட்டுக்குழம்பு
சமைத்துவிட்டால்?
கேட்கவே வேண்டாம்...

வீட்டின் அருகில்
கேணி ஒன்று இருப்பதால்...
பேயாக இருக்கலாம்!
என்றனர் சிலர்...

என்னவாக இருந்தாலென்ன?
போதையில் இருப்பவனை
பேயென்ன செய்துவிடும்?
என்று நானும் விட்டுவிட்டேன்...

ஆனாலும் மனதுக்குள்
ஒரு தேடல்...
என்னவாக
இருக்குமென்று...

ஒரு நாள்
தென்பட்டது...
கையும் களவுமாய்
பிடிபட்டது...
பேயுமல்ல; பூதமுமல்ல!

சுதந்திரமாய்
சுற்றித்திரியும் - ஒரு
சுட்டிப்பூனை...
ஓர் அழகான
குட்டிப் பூனையென்று...
 
பிறகு நாங்கள்
நண்பர்களானோம்...
நள்ளிரவில் வரும் நண்பன்
நண்பகலிலும் வர ஆரம்பித்தான்...

கடந்த இரண்டு நாட்களாக
நண்பனை காணவில்லை...
ஏனென்று தெரியவுமில்லை!!!

குடும்பத்தை காண
சென்றிருப்பானோ?
காதலியை பார்க்க
போயிருப்பானோ?
என்றெல்லாம் யோசித்தேன்...

நேற்று மாலை
என் வீட்டின் அருகிலுள்ள
முருங்கை மரத்தடியில்
இறந்து கிடந்தான்!
என் நண்பன்...

என்ன நேர்ந்தது?
யாரிதை செய்தது?
எதுவும் புரியவில்லை...

காலங்காலமாக
செய்தது தானே?
புதிதாய் என்ன
செய்துவிட போகிறேன்?
வழக்கம் போல
பணிகளை தொடர்ந்தேன்...

கல்லாகி போச்சு மனசு...
கருங்கல்லை விட மோசமாய்...
எதற்குமே கலங்குவதில்லை...
இதற்க்கு பெயர் தான் சுயநலமா?

Wednesday 9 March 2011

வேண்டுதல்...

காலையில் தான்
காமாட்சி வந்தாள்...
அவா கேட்டபடியே
ஆத்துக்காரன் அமைஞ்சாலும்
மாமியாரும், நாத்தனாரும்
கொடுமை பண்றாளாம்!!!

மதியம் தான் மனோகர் வந்தான்
இன்னும் அந்த படவாக்கு
வேலை கிடைக்கலையாம்!
கவர்மென்ட் வேளை தான் வேணுமாம்...

நேத்து தான் வந்துட்டு போனாள்
நேக்கு பூமாலை தொடுக்கும் நிவேதா...
கல்லூரி கட்டணம் செலுத்த
இன்றுதான் கடைசி நாளாம்...

செத்த நாழி முன்னாடிதான்
ஒரு காதல் ஜோடி வந்து
கயவாளித்தனம் பண்ணினது...

போதாதுன்னு கட்சி காரா
எல்லாம் வரா...
கூட்டணி அமையனுமாம்...
தேர்தலில் ஜெயிக்கனுமாம்...
மந்திரியா ஆகணுமாம்...
இப்படி எத்தனையோ 
வேண்டுதல்கள்...
விதவிதமா வழிபாடு பண்றா...

தெரு மூலைல
தேமேன்னு உக்காந்திருக்கேன்...
காக்கவும் குருவியும்;
என் தலைலதான்
கக்கா போயின்றுக்கு...
அதை யாரும்  
கண்டுக்க மாட்றா...

தினம் என் உண்டியல்ல
திருடன் காசையெல்லாம்
எடுத்துண்டு போறான்...
அவனாவது பரவால்ல
வயித்துக்காக திருடுறான்...

நான் பால் குடிக்கிறேன்னு சொல்லி
ஊருல உள்ள பாலையெல்லாம்
பிரம்மஹத்திகள்... 
என் மேல கொட்டுறா...

வேண்டுதல்ன்னு சொல்லிண்டு
மூட்டை மூட்டையா
தேங்காய் உடைக்கிறா...

இதையெல்லாம் யாருடா கேட்டா?
ரெண்டு வருஷமா நானும்
ஒரே வேட்டிய கண்ட்டிண்டு இருக்கேனே?
நாத்தம் மூக்கை அடைக்கிறது...
அதை யாராவது செத்த மாத்துங்கோளேன்...

Tuesday 8 March 2011

பெண்மை போற்றுதலே ஆண்மை...

பூவினும் மென்மையும் 
பூமியினும் பொறுமையும்
கொண்ட பூவையரை...

அடக்குவதும்
முடக்குவதுமே 
ஆண்மை என்று...
ஆண்டுகள் பலநூறாய்
ஆண்டுவந்த ஆணினமே...

முன் பின் அறிமுகமில்லா!
முகவருக்கு வணக்கம் வைத்தோம்...
அலுவலக பனி நிமித்தம்
அனைவரையும் அனுசரித்தோம்...

சகலமும் நாமென
சகித்துக்கொள்ளும் ஒருத்தியை...
சக மனிஷியாக;
சமமாக நடத்துவதில்...
என்ன குற்றம் கண்டீர்?

பெண்ணவளை;
பூவென்றும் புகழ வேண்டாம்...
பூமியென்றும் போற்ற வேண்டாம்...
நண்பனாக நேசிப்போம்...
நாகரீகம் கர்ப்பிப்போம்...
வீடாள வந்தவளை;
நாடாள மாற்றிடுவோம்...

அடக்கியாள்வது
ஆண்மையாகாது...
பெண்ணடிமை தனமென்றும்
போற்றலாகாது...

கூண்டுகிளிகள் கூடு
தாண்டி செல்லட்டும்...
வேண்டுவன யாவும்
தாவியது வெல்லட்டும்...

பொத்திவைத்த உணர்வுகள் யாவும்
புத்துயிர் கொள்ளட்டும் - அவள்
பொக்கிஷமாய் அடக்கிவைத்த
புன்சிரிப்பு பொங்கட்டும்...

Saturday 5 March 2011

கசடற கற்போம்...


Assault-ன்னா பத்தாயிரம்...
Murder-ன்னா ஒரு லட்சம்...
படிப்பறிவில்லா
ஒரு கூலிப்படையை சேர்ந்தவன்
பேசும் சரியான சொற்களை கூட?
...
பட்டதாரிகள்!
நம்மால் சரியாக பயன்படுத்த முடியவில்லை...
கடுமையாக தாக்குதல் என்ற அர்த்தம் கொண்ட
அசால்ட் என்ற சொல்லை;
நாம் எப்படி பயன்படுத்துகிறோம் தெரியுமா?
..........................................................................................
காலைலேர்ந்து காட்டு கத்து கத்துறேன்.
நீ அசால்ட்டா உக்காந்திருக்க... என்று
பல பெற்றோர்கள் சொல்வதை நம் காதுகள்
பலமுறை கேட்டிருக்கும்...

இதை உன்னால் செய்ய முடியுமா?
என்ற கேள்விக்கு...
மச்சி இதெல்லாம் அசால்ட்டுடா...
என்பதையும் பார்த்திருக்கிறோம்...

ஒரு வார்த்தையின் அர்த்தத்தை
தலைகீழாய் மாற்றுவது
எங்ஙனம் சரி?

தவறு!
பிறமொழி பேசுவதில் இல்லை...
அதை தவறாக பேசுவதில் உள்ளது...

எம்மொழி கற்றாலும்
கசடற கற்ப்போம்...
அம்மொழி இலக்கணங்கள்
மாறாமல் நிற்போம்...

Friday 4 March 2011

22/1 ஆண்டவர் நகர், 3 ம் தெரு, கோடம்பாக்கம்.

மகிழ்ச்சியின் முகவரி
யாதெனக்கேட்டால்?
மனமார சொல்வேன்
இதுதானென்று...

ஆம்!
மகிழ்ச்சியின்
மற்றொரு பரிமாணத்தை
எங்களுக்கு சொல்லித்தந்தது
அந்த வீடு...

அங்ஙனம் உண்டு
உடுத்தி, உறங்கி,
உழன்றதனால் வீடென்றே
எழுதளுற்றேன்...

உண்மையில் வீடல்ல அது...
சிகரமேற நினைத்து;
தன் கூடுவிட்டு பறந்து வந்த;
சிட்டுக்குருவிகளின் பட்டுக்கூடாரம்...

வாழ்வின் இலக்கணத்தை
வாரித்தந்த போதிமரம்...
சின்னச் சின்ன அறைகள் கொண்ட
செட்டியார் பில்டிங்...

வண்ண வண்ண
கனவுகளோடு வாழ்வு தேடிய...
இயக்குனர்கட்க்கு!!!
அள்ள அள்ள கதைகள் தந்த
கலைக்களஞ்சியம்...

இயக்குனர் சேரனும்
இன்னபிற ஆட்களும்
இங்குதான் வாழ்ந்ததாக
கேள்வி...

பிரம்மச்சாரி விடுதியின்
அத்தனை சாராம்சமும்
சற்றும் குறையாமல் இருக்கும்...

இளைப்பாறவும்...
இமை மூடவும்...
இன்றுவரை அமையவில்லை
இதுபோன்றொரு இருப்பிடம்.

கொளுத்தும் கோடையும்;
குளுமையே எங்களுக்கு.
கொட்டிக்கிடக்குது ஞாபகங்கள் - கொள்ளை
அடிக்கமுடியா பொக்கிஷங்கள்...

ஒவ்வொரு நிகழ்வும்,
ஒவ்வொரு அனுபவம்...
நினைத்துப்பார்த்தால்?
நெஞ்சுக்குள் பூமழை...
நெகிழ்ச்சி மிகுதியால்?
கண்ணுக்குள் ஓர் அலை...

கையில் பணமிருக்காது - ஆனாலும் 
புன்னகைக்கு குறைவிருக்காது...

நான்கு ருபாய்
அன்றிருந்தால்?
இரண்டு கட்டு பீடியோடு
தொடரும் எங்கள் ராக்கூத்து...
விடிய விடிய சீட்டாட்டம்...
வீட்டுக்குள் மேகமூட்டம்...

காதல் கதைகளும்
மாண்டதுண்டு!!!
காமன் கணைகளும்
பாய்ந்ததுண்டு!!!

எனது இறுதி மூச்சும் சொல்லும்
நன்றிகள் கோடி...
கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்காத நண்பர்களை தந்ததற்கு!!!

வரலாறு படைத்த கட்டிடம்
தரைமட்டமாக்கப்பட்டு;
ஐந்தாண்டுகள் ஆகிறது...
புதுக்  கட்டிடமாக
பிரவியொன்றை எடுக்கிறது.
புதிய வரலாறு எழுத...

- பத்மா சுவாமிநாதன்

Wednesday 23 February 2011

தவம்...

விடியல் வரும் முன்னமே
விழித்திடுவாள்...
சேவலது கூவும்போது;
சாணி கரைத்து போட்டிருப்பாள்...
சிலிர்க்கவைக்கும் குளிரிலும் 
சிக்கு கோலம் போட்டிடுவாள்...
சாணத்தை நடுவே வைத்து;
பரங்கிப்பூ மேலே வைத்து - அவள் 
கோலத்தை அலங்கரிக்கும் அழகை...
எக்கவியாலும்
எடுத்துரைக்க இயலாது...
நல்லெண்ணெய் விரலில் தடவி
நயமாய் அவள் கறக்க...
கன்றை மறந்த பசு;
கண் கொட்ட பார்த்திடுமே...
பசுவிடம் பேசிக்கொண்டே;
கன்றை அவிழ்த்துவிடும்...
தூயவளின் தாய்மை கண்டு;  
தூவும் பனி விலகிடுமே...
அதிகாலை தொடங்கி
அர்த்த ராத்திரி வரையில்...
அத்தனை வேலையையும் 
அலட்டாமல் முடிப்பதைக் கண்டு !
அரண்டு போய் பார்க்கும்; 
அறையில் உள்ள கடிகாரம்...
ஒரே ஒரு பொழுதுபோக்கு
தொலைக்காட்சி நாடகங்கள்!!!
தொல்லை கொடுக்க;
பிள்ளைகள் வந்தால்?
தொலைந்துவிடும் அவைகளும்...
எத்தனை இடர் வந்தாலும்?
அத்துணைக்கும் அவளது பதில்
மௌனமே.............
அமைதியான ஓருயிர் 
அவனியில் உண்டென்றால்...
அது தாயன்றி வேறேது?
அந்த தாயன்பிற்க்கீடேது?
வயிற்றில் உதைத்த போதே
வாய்மூடி ரசித்தவள்...
சின்ன சின்ன விஷயத்துக்கா
சினம் கொண்டு சீரிடுவாள்?
ஆதியும் அவளே...
அண்டமும் அவளே...
துவண்டு விழுகையில் எனைத்
தாங்கும் பூமியும் அவளே...
இம்மானுடன் மோட்சம் பெற
ஓர் வரம் தந்திடடி...
மீண்டும் ஒரு பிறவி கொண்டால்?
என் மகளாக பிறந்திடடி...
உத்தமியே உந்தன் கால்கள் - இந்த
பித்தனையும் உதைக்கட்டுமே!!!
பண்ணிய பாவம் யாவும்
என்னை விட்டகலட்டுமே!!!

- பத்மா சுவாமிநாதன்.

Monday 21 February 2011

கிறுக்குப்பய கனவு...

எங்கள் நீண்டநாள் கனவை
போலவே...
எங்களுக்கு பிறந்தது
இரட்டை குழந்தை...
மகன் பெயர் ரிஷிகேஷ்
என் சாயலில் இருப்பான்...
மகள் பெயர் வசுமதி
என் மனைவியை போல...
எல்லா தகப்பனைப்
போலவும்!
எனக்கும் மகளையே பிடிக்கும்...
என்னைப் போல
இருப்பதினால் - என்
மனைவிக்கு மகனையே
பிடிக்கும்...
அவர்கள் அமைதியாய்
அமர்ந்திருந்தாலும்?
அவர்கள் பெயரைச்சொல்லி
நாங்கள் அடித்துக்கொள்வோம்...
நேற்றும் அப்படித்தான்...
ரிஷி வைத்திருந்த
பொம்மையை வசுமதி
பிடிங்கிக்கொண்டாள்...
அவ்வளவுதான்
வீடே ரெண்டு பட்டது...
அழவேண்டிய மகனோ
அமைதியாகத்தான் இருந்தான்...
அருகிலிரிந்த மனைவியோ
அடக்க முடியாத அழுகையோடு
அடியும் தந்தாள் - வசுமதிக்கு...
இரவு பத்து மணி...
இருவரையும் தூங்கவைத்து விட்டு - நான்
இருக்கும் கட்டிலுக்கு
வந்து சேர்ந்தாள் என் மனைவி...
ஏன் இத்தனை கோபம்?
என நான் கேட்க...
மடை திறந்த வெள்ளம்போல
கண்ணீரை கொட்டிக்கொண்டே
காரணத்தையும் சொன்னாள்.....................
வசுமதி வரவுக்குப்பின்
என்னை முழுவதுமாய்
மறந்துவிட்டாய்...
எப்போதுமே நீதான்
எனக்கு எல்லாமே என்றாயே...
மகளை பார்த்ததும் மாறிவிட்டாயே?
கொஞ்சலும்; கெஞ்சலும்...
உன் நெஞ்சின் கதகதப்பும்...
வேண்டி நான் நிற்கையில்!
அவளை மட்டுமே
அரவணைத்தால்?
கோபம் வராமல்
வேறென்ன வருமென்றாள்?
மாசற்ற அவளன்பில்
மனமுருகி நினைத்துக்கொண்டேன்...
அட கிறுக்குப் பயபுள்ள...
உன்னை மாதிரி
இருக்குறதால...
நீயும் இப்படித்தான்
இருதிருப்பியோன்னு...
அவளை ஆசையா தழுவுறேன்...
மூச்சுக்கு மூச்சு
முத்தமிடுறேன்...
இன்னைக்கு மட்டுமில்ல
என்னைக்குமே நீதான்
என் முதல் குழந்தைன்னு...
சொல்ல வேண்டிய வார்த்தைகள;
சொல்ல முடியாம...
ரெண்டு சொட்டு கண்ணீர
அவ கன்னத்துல உதிர்க்கும்போது...
டக்... டக்... டக்...
யாரோ கதவ தட்டுறாங்க...
கதவை திறக்கையில்
கேபிள் டிவி காரர்...
சார் நூறு ரூபா தரனும்...

- பத்மா சுவாமிநாதன்.

Thursday 17 February 2011

Lets the hell out of here...

விண்ணை முட்டுது
விலைவாசி உயர்வு...
கண்ணை கட்டுது
கயவர்களின் ஊழல்கள்...
கழுத்தை நெரிக்குது
கரைவேட்டி அரசியல்...
நெஞ்சை அடைக்குது
நீதிமன்ற தீர்ப்புகள்...
உயிரே போகுது - எங்கள்
உரிமையை பறிக்கையில்...
இரத்தம் கொதிக்குது - எங்கள்
இரத்த சொந்தம் தவிக்கையில்...
கட்டுமரமேருது மானம் - தமிழன்
சுட்ட பிணமாய் வருகையில்...
ஆற்றுனா துயர் கொண்டோம்...
ஆண்டவன் செயல் என்றோம்...
எகிப்தில் நடந்ததே 
இங்கு எப்போது?
கையாலாகாத கயவனாய்
ஆனேனே...
புலம்பி தீர்க்கும் - நடைப் 
பிணமாய் போனேனே...
கடவுளோ; இயற்கையோ?
அநியாயம் தலைவிரித்தாடும் பொது...
அமைதியாகத்தானே இருக்கிறது...
பிறகெதற்கு இவைகளெல்லாம்?
பொய் சொல்லக்கூடாது...
புறம் பேச கூடாது...
களவம் கூடாது...
கடவுளை மறக்க கூடாது...
என சொல்லி
ஏன் என்னை வளர்க்கவேண்டும்?
பொய்,
பித்தலாட்டம்,
ஊழல் நிறைந்த உலகத்தில்
பீ தின்னும்
நாயாய் நான் வாழ்வதற்க்கா?

- பத்மா சுவாமிநாதன்

Monday 14 February 2011

காதலர்கள் தோற்பதுண்டு - அனால் காதலென்றும் தோற்பதில்லை...


உன்னை போற்றாத
ஆளில்லை...
புகழாத பேரில்லை...
ஊற்றாக பெருக்கெடுத்து
நீ வரும்போது...
காற்றேது; கனலேது?
கரைபுரண்டு ஓடுமே;
காட்டாற்று வெள்ளம்போல...
கடவுள் மறுப்போரும் கூட - உன்னோடு 
கைகோர்த்து நடப்பாரே...
உன்னை நம்பித்தான்
இவ்வையமே வாழ்ந்திடுதோ?
உன்னை சுற்றித்தான்
இவ்வுலகமே சுற்றிடுதோ?
வள்ளுவன் தொடங்கி
வடநாட்டு புலவன் வரை...
எத்துனை பேர் உனக்கு
வெண்சாமரம் வீசினரோ?
பெற்றவர் தொடங்கி
உற்ற மாமன் வரை
எத்துனை பேர் உன்னை
வாய்விட்டு ஏசினரோ?
போற்றினாலும் தூற்றினாலும்...
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்...
புத்தம்புது பூவாய்
பூக்கும் உன் புன்சிரிப்பில்...
எத்தனை அழகு...
மொழிகடந்து இனம்கடந்து...
முழுமை நீ அடைந்த பின்னும்...
இளமை மாறாலும்
இன்னும் நீ 
இருப்பது எப்படியோ?
உனக்காக ஒருநாள்;
உலகமே கொண்டாடும்...
உன் பெயரை சொல்லி;
உணர்வுகள் திண்டாடும்...
வாழ்த்துக்கும்;
மகிழ்வுக்கும்;
உயிர்தந்த உன்னை
வாழ்த்த ஆளில்லை என்பதனால்?
என் வாழ்த்து...
"வாழ்க நீ பல்லாண்டு..
 பல்லாயிரத்தாண்டு...
பலகோடி நூற்றாண்டு..."

Saturday 12 February 2011

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்...


அப்பநென்பார்... 
அம்மையென்பார்...
சுற்றமென்பார்...
நட்பென்பார்...
நெருப்பென்பார்...
நீரென்பார்...
பஞ்ச பூதம் சாட்சியென்பார்...
அம்மி மிதித்திடுவார்...
அருந்ததியும் பார்த்திடுவார்...
காலநேரம் கழித்துக்கூட்டி; 
காமத்துக்கும் நாட்க்குறிப்பார்...
மாமியார் விடென்பார்...
மாமனார் சீரென்பார்...
மாப்பிள்ளை விருந்தென்பார்...
மைத்துனன் பரிசென்பார்...
கொழுந்தியாக் குசும்பென்பார்...
தாம்பத்திய உறவென்பார்...
பொண்டாட்டியே போதுமென்பார்...
பிள்ளைகுட்டி பெற்றிடுவார்...
இத்தனையும் கடந்த பின்னே;
இட்லி மாவு பிரச்சனைக்கு...
இனி அவள் வேண்டாமென
நீதிமன்றம் சென்றிடுவார்...
வெக்கமில்லா மனிதர்கள் பாரீர்...
உறவுகளை வெட்ட துடிக்கும்
விலங்குகள் பாரீர்...
விவாகரத்து எதற்கு?
இருமனங்கள் இணைந்துவிட்டால்
எந்த சட்டம் கேள்வி கேட்கும்?
உன்னோடு சகலமும்
பகிர்ந்துகொண்ட ஒருத்தியை பற்றி...
எவனிடமோ சொல்கிறாயே?
உன்னை சொல்லி திட்டுவது?
அல்லது விவாகரத்து சரிதானா?
 

Friday 11 February 2011

Royal salute...

நல்ல படம் பார்த்து
நீண்ட நாள் ஆகுதுன்னு
பொலம்பிகிட்டே போனேன்
ஒரு படத்துக்கு.
ஓபனிங் சாங்... 
டபுள் மீனிங் வசனம்...
குத்து பாட்டு என...
வழக்கமான தர்க்கத்தை விட்டு
சற்று தள்ளி வந்து
புது அர்த்தத்தை சொல்லி சென்றது...
இயக்குனர் பூர்வ ஜென்மத்தில்
தலைசிறந்த சிற்பியாகவே
இருந்திருக்க வேண்டும்...
காரணம் அவர் செதுக்கியிருந்த
கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு
என்னை அவ்வாறு நினைக்க தூண்டுகிறது...
ஒவ்வொரு பாத்திரமும்
அதன் தன்மைக்கேற்றவாறு
பிரதிபலித்திருக்கிறது...
பாடலே இல்லாத திரைப்படம்...
வக்கிரம் காட்டாத திரைக்கதை...
இரண்டரை மணிநேரம் ஒரே இடத்தில்
இருந்ததே தெரியவில்லை...
அற்புதமான படைப்பு...
இதற்குமுன் இயக்குனர்
பயணித்த பாதையிலிருந்து
புதிய பரிமாணத்தில் பயணிக்கிறார்...
என்னை பொறுத்தவரை
2011-ன் அனைத்து விருதுகளுக்கும்
தகுதியான படமாக இதை எடுத்துக்கொள்ளலாம்...
தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய
"பயணம்..."
திரு.இராதா மோகன் அவர்களுக்கும்
இப்பட குழுவிற்கும் ஒரு சல்யூட்...

Wednesday 2 February 2011

கதைகதையாம்... காரணமாம்...

மக்கள் முகத்தில்
மட்டற்ற மகிழ்ச்சி...
எதிர்கட்சி ஆட்களுக்கு 
ஏகத்துக்கும் குளிர்ச்சி...

அனைத்திற்கும் காரணம்
ஆ.ராசா கைது...
அருமையான நாடகம்
அற்புதமான திரைக்கதை...

இது கலைஞரின்
எழுபத்தி ஆறாம் படைப்பு...
இளைஞனுக்கடுத்து
இவரின் முனைப்பு...

இத்தனை நாள்
கழித்து
ஏன் இந்த
நாடகம்?

சிந்தித்து 
பார்த்தேன்
சிரிப்புதான்
வருகிறது...

சி.பி.ஐ அதிரடியாம்...
தி.மு.க தடாலடியாம்...
அடப்பாவிகளா
சின்னப்புள்ள தனமா இல்ல?

இது தேர்தல்
வரும் காலம்...
இனி தென் சொட்ட
கதைகளும் வரும்...

கதைகளை ரசிக்க
கற்றுக்கொள்ளுங்கள்...
கன நேரமும் நம்பிவிடாதீர் - இந்த
கிழப்பயலை...

நம்பும்படி
கதை சொல்வான்...
நயவஞ்சக
நரிபோல...

நம்பியவர்
கழுத்தறுப்பான்
நயமாய்
பேசிக்கொண்டே...

மறந்தும்
நம்பிவிடாதீர் - இவன் 
மயக்கும்
வித்தைக்காரன்...

Tuesday 1 February 2011

அஸ்தமனம்...

கதை சொல்வதில்
தமிழனுக்கு நிகர்
தமிழனே...
காரணம்?
அவர்கள்
கதை சொல்லும் விதமே...
புராணம் என்றாலும்
வரலாறு என்றாலும்
கூடியிருக்கும் கூட்டத்தை
தன் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்...
அப்படி ஊரே
ஒன்றுகூடி ரசித்த
ஒரு கலைதான்...
வில்லுப்பாட்டு.
போர்களத்தில்
உயிரை பறிப்பதற்கு
பயன்படுத்திய வில்தான்
முதன்மை வாத்தியம்...
அடுத்தது உடுக்கை,
கடம் என புடைசூழ...
நாட்டுப்புற பாடல்களால்
சொல்லப்பட்ட
கதா காலட்சேபம்...
"தந்தனத்தோம் என்று சொல்லியே...
வில்லினில் பாட...
ஆமா...
வில்லினில் பாட...
வந்தருள்வாய் கணபதியே...."
இறைவனக்கதொடு
பாடல் தொடங்கும்...
இடையில் அவ்வபோது
ஒரு குரல் வரும்...
ஆமா, அப்படியா,
ம்ம்ம்ம் - இவையெல்லாம்
அவையோரின் பிரதிபளிப்பு
என்றே தோன்றும்....
பாட்டோடு கதை வரும்...
கதையின் நடுவே பாட்டு வரும்...
கதை சொல்பவரே
கதாநாயகன்...
வந்திருக்கும் அனைவருக்கும்
வணக்கம் சொல்லி
வரவேர்ப்பார்...
கதை சொல்லி
முடிக்கும் வரை
அணுவும் அசையாது...
எப்போதோ பார்த்த
ஞாபகம்...
இப்போதும் பசுமையாய்...
எப்போதாவது நிகழ்சிக்கு
தொலைகாட்சிகள்
இவர்களை அழைப்பார்கள்...
இப்போது அதுவும்
முடிவுக்கு வந்தது...
விடுமறை நாளென்றால் போதும்
வந்துவிடும் ஒரு குரல்...
"இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக...
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...
புத்தம் புதிய திரைப்படம்...
காணத்தவறாதீர்கள்..."

அவ்வளவுதான் பிறகெப்படி
இக்கலை வளரும்...
மேடை நாடகங்கள்,
பொம்மலாட்டம் போல்
குறைந்து வரும் கலைகளில்
வில்லுப்பாட்டும் ஒன்று...
தமிழ் பண்பாடு,
கலாச்சாரங்களைக் காப்போர்
இதையும் கண்டுகொண்டால்...
மகிழ்ச்சி....

-பத்மா சுவாமிநாதன்

இது உங்கள் சொத்து...

தினமும்
என்னை நம்பி - பெருந் 
திரளானோர்
வருவதுண்டு...

எனக்காக
கால்கடுக்க
காத்திருக்கும்
கூட்டமுண்டு...

தாய்பால்
குடிக்கும்
குழந்தையும்
வருவர்...

வாழ்கை
வெறுத்த
வயோதிகரும்
வருவர்...

கட்டிளம்
காளையரும்
கட்டழகு
பெண்டீரும்...

என்னுள்
வந்துவிட்டால்
காதல் செய்வர்
கண்களாலே...

பள்ளிக்கூடம்
போவோரும்
கல்லூரி
செல்வோரும்...

என்னை
நம்பி ஏறும்போது
இனம்புரியா
மகிழ்ச்சி எனக்குள்...

எத்தனையோ
சம்பவங்கள்
என்னுள்
அரங்கேற்றம்...

புத்துயிரும்
பிறந்திருக்கு
கத்திமுனையும்
பேசியிருக்கு...

இறப்பு;
பிறப்பு;
இவையெல்லாம்
எனக்கு சகஜம்...

எதுவானாலும்
ஏற்றுகொள்வேன்
இயக்கத்தை
நிறுத்தமாட்டேன்...

பொக்கை, போரை
பாதை என்றாலும்!
போகவேண்டியது
என் கடமை...

மழைமட்டும்
வந்துவிட்டால்
என் பாடு
திண்டாட்டம்...

கட்டுமரமாய்
சென்றிடுவேன்
கறைக்கப்பால்
சேர்த்திடுவேன்...

இத்தனை பெரிய
இயந்திரத்தை
இருவர் மட்டுமே
இயக்கிடுவர்...

ஆயுத பூஜை
அன்றுமட்டும் - என்னை
அழகுபடுத்தி
பார்ப்பார்கள்...

ஆத்திரம்
வந்துவிட்டால் - அவ்வபோது 
அழவைத்தும்
பார்ப்பார்கள்...

யாரோ ஒருவர்
கைதானால் - முதலில்
உடைவது
என் முகம் தான்...

கோபம் இன்னும்
கொடிதானால் - என்னை 
கொளுத்தியே விடுவர்
கோமாளிகள்...

ஆம்!!!
தங்கள் சொத்தை
தாமே அழித்தால் - அவர்கள் 
கோமாளிகள் தானே...

வேறென்ன
சொல்வது - இந்த
வீணாய்ப்போன
மானுடரை...

Thursday 27 January 2011

காதலென்ன கத்திரிக்காயா?

பால்குடி மறக்காத
பிள்ளையின் அழுகை
என்றே பெற்றோர்கள்
நினைப்பதுண்டு...

காலம் தரும்
மருந்தினால் - இந்தக்
காதல் புண்ணும்
ஆறுமென்று...

அழுகின்ற
குழந்தைக்கு
ஆறுதல்
சொல்வது போல...

அழகாய்
விளக்கங்கள்
ஆயிரம்
சொன்னாலும்...

அவர்கள்
ஏற்க மறுப்பது
ஏன் என்று
நினைத்ததுண்டா?

அவர்கள் வாழும்
உலகமே வேறு - அதை
உற்றுநோக்கி
நீயும் பாரு...

கண் விழித்து
பார்க்கும்போது
கண்முன்னே
அவள்முகம்...

கண்ணாடி நான்
பார்த்தால் - என்  
முன்னே அவள்
நிற்ப்பாள்...

நின்றாலும், நடந்தாலும்
உண்டாலும்; 
நினைவில் எப்போதும்
அவள் ஞாபகம்...

அவளைப்
பார்க்காத நாள் 
எனக்கு பைத்தியம்
பிடிக்கும்...

ஒட்டுமொத்த
உலகமே - அவள்
ஒருத்தியை
சுற்றித்தான்...

என்பவனிடம்
பெற்றகதை
வளர்த்த கதை
எடுபடுமா?

அல்லது
பெற்றவளின்
கண்ணீர்தான்
விடை தருமா?

மனம் மாறி
வந்தாலும்
பிள்ளையின்
மனவேதனை தீருமா?

ஒப்பந்தம்
போடுவோமே - அவர்கள்
காதலை
ஒற்றுக்கொள்ள...

வளர்ந்து காட்டச்
சொல்வோம்...
வாழ்வில் வென்று
காட்டச்சொல்வோம்...

பெற்றோர், சமுதாயம்,
எதிர்காலம் இவ்வனைத்தையும்
தாண்டி துளிர்விடும் ஒன்று
நன்மைக்கு பயன்படட்டும்...

காதலும்
ஒரு நெருப்புதான்
பிள்ளைகள் கருகுவதை
பார்த்ததில்லை?

வேறு இடத்தில
திருமணம் என்றால்
வேரூன்றிய காதல்
போய்விடுமா?

பறித்தவுடன்
மீண்டும் காய்க்க...
காதலென்ன
கத்திரிக்காயா?





Tuesday 25 January 2011

உன்னைப்போல் ஒருவன்...

காகம் 
இறந்துபோனால்
கலவரமாகுது - எங்கள்
மொட்டைமாடி...

நாயொன்றின் 
உயிர்பிறிந்தால்
நள்ளிரவு நண்பர்களின்  
ஒப்பாரி...

ஓலைப்பாம்பொன்று
உயிர்துறந்தால்
ஒட்டுமொத்த பாம்புகளின் 
அணிவகுப்பு...

எறும்புகூட
தன் துக்கத்தை
இயல்பாய்
வெளிப்படுத்தும்...

காக்கைக்கும்
நாய்க்கும்
எறும்புக்கும்
உள்ள குணம்...

தமிழனுக்கு
ஏனோ இன்னும்
தட்டுப்படவே
இல்லை...

தனது இணம்
வேரருக்கப்படுவதை
எந்த இனமாவது
பார்த்து ரசித்ததுண்டா?

கண்ணாற
கண்டோம்...
காதாற
கேட்டோம்...

இலங்கையில்
நடந்ததை
இறையாண்மை
என்றோம்...

இந்த மண்ணில்
நடக்கும்போது
எதைசொல்லி
தவிர்ப்போம்...

மாணவன்
தாக்கப்படுவான்
என்றதும்
பொடா பாய்ந்ததே...

எங்கள் மீனவன்
தாக்கப்படும்போது
ஏன் எதுவுமே
பாய்வதில்லை?

மனித உரிமை
கழகமென்ன
மன்னையா
தின்கிறது?

மந்திரி பதவிக்கு
மட்டும்
டெல்லிக்கு போகும்
தந்திரக் கிழவன்...

தமிழன் உயிரென்றால்
தந்தியும் கடிதமும்
அனுப்புவானாம்?
அதை மத்திய அரசு ஏற்க்குமாம்... 

முத்துக்குமாரின்
மரணத்தை அரசியலாகினார்களே...
ஏன் மீனவன் சாவை
கையிலெடுக்கவில்லை...

கேட்டுகொண்டே போக
கேள்விகள் ஆயிரமுண்டு...
கேட்கும் யோக்கியதை
எனக்கென்ன இருக்கிறது...

நானும்
உங்களைப் போல்
ஒருவன் தானே...

- பத்மா சுவாமிநாதன்

ஜீவநதி

பிறக்கும்போதும்
அழுதிட்டோம்...
பிறந்தபின்னும்
அழுதிட்டோம்...

உறக்கம் வரும்வரை
அழுதிட்டோம்...
உறங்கி பின் விழிக்கையில்
அழுதிட்டோம்...

பசித்தபோதும்
அழுதிட்டோம்...
பலகாரம் வேண்டி
அழுதிட்டோம்...

பள்ளி செல்கையில்
அழுதிட்டோம்...
பாடம் படிக்கையில் 
அழுதிட்டோம்...

பெண் வாழ்வில்
வந்துவிட்டால்
பேரழுகை
நாம் கொண்டோம்...

பேதை அவள்
பிரிந்து சென்றால்
தாடி வைத்து
தழுதழுத்தோம்...

வேலை, குழந்தை,
பெற்றோர், உற்றார்,
இவ்வனைத்தும் தழைத்தோங்க
இமை மூடி அழுதிட்டோம்...

இறுந்தவன் 
இறந்துபோனால் 
இரவு பகலாய்
அழுதிட்டோம்...

வற்றாத ஜீவநதி
தமிழ்நாட்டில் இல்லையாம்!!! 
வற்றியதே இல்லை
எங்கள் ஜீவன் வற்றும் வரை...

Thursday 20 January 2011

கரத்தான் நைனா...

ஒவ்வொரு அமாவாசையும்
எங்க ஊருல ஹொலிடே...
யாரும் வேலைக்கு போக கூடாதுங்குறது
ஊர் கட்டுப்பாடு (உத்தியோகஸ்தர்கள் தவிர)...
நடவா இருந்தாலும் சரி...
நாத்து பறியா இந்தாலும் சரி...
எந்த வேலையும் நடக்காது...
ஊர் பிரச்சனை...
வாய்க்கா வெட்டு...
குளம் குத்தகை...
புளியமரம் குத்தகை...
போதுவடை நிலம்...
இதப்பத்தியெல்லாம் பேசுற;
ஊர் கூட்டம்...
எங்க ஊரு சட்டசபை...

ஊர் மத்தியில இருக்கிற
மாரியம்மன் கோயில் தான் ஸ்பாட்...
ஊருல உள்ள பெருசு எல்லாம்
ஒன்னு ஒண்ணா வந்து சேரும்...

பாத்து மணி வாக்குல;
கிட்ட தட்ட எல்லாரும் வந்துருவாங்க...
ஒரு ஆள் தவிர...
அவர்தான் "கரத்தான்"...
நாங்கள்லாம் நைனான்னு கூப்பிடுவோம்...

ஆளு லேட்டா வந்தாலும்
அவர் வந்தாதான் கூட்டமே களைகட்டும்...
உள்ள வந்த உடனே;
மடியில இருக்கிற மூக்குப்பொடி டப்பாவ எடுத்து
தலைல ரெண்டு தட்டு தட்டுவாரு...
அவ்வளோதான்...
இளவட்டமேல்லாம்
குதூகலம் ஆயிடும்...
எல்லாரும் இப்படியே இருந்தா
என்னா அர்த்தம்?
யாராவது ஆரம்பிங்கப்பா - ன்னு
ஒரு குரல் கேக்கும்...

அதாகப்பட்டது....
குறுவை சாகுபடிக்கு நாள் ஆயிடிச்சி...
ஆத்து தண்ணிய நம்பிதான் இருக்குறோம்...
போன வருஷம் வெட்டுன வாய்க்கா துந்துடிச்சு...
இந்த வருஷமும் வாய்க்கா வெட்டனும்...
அதுக்காக தான் இந்த கூட்டம்-னு
ஆரம்பிப்பாரு நாட்டாமை...

மூக்குப்பொடியின் நெடி
மூளைக்கேற நைனா
கிடுக்குப்புடி போடுவார்...

அதெல்லாம் இருக்கட்டும்
போன வருஷம்
வாய்க்கா வெட்டு
வரவு செலவு கணக்கு
ஏன்னா ஆச்சு?

கூட்டத்தில் காரசாரம்,
கூச்சல் குழப்பம்
வெடிக்கும்...
எங்கு பாத்தாலும்
முட்டா பு...
மட பு...
கெழ பு... இப்படி
திரும்பிய பக்கமெல்லாம்
பு... வாசம் வீசும்.

அங்கதான் நிப்பார் நைனா
எவன்டா இது
புநா...
சுநான்னு கெட்ட வார்த்தை
பேசிக்கிட்டு...
பெரியமனுசன்
சின்ன மனுஷன்
மரியாதையில்லை?
இதே வேலை பு... யா இருக்கு
உங்ககூட...
முட்டா பு...யோல
................................................................
எவன் எத வெட்டுனா
எங்களுக்கென்ன?
சின்ன பசங்க நாங்க
சிரிச்சிக்கிட்டே இருப்போம்...
இப்பவும் நடக்கும்
இந்த கூத்து...
நைனாவுக்குதான்
வயசாயிடிச்சி - ஆனாலும்
அவர் மூக்குப்பொடியையும்
விடல...
முநா புநாவையும் விடல...

மும்மூர்த்திகள்...

கால் பதிக்க
ஆளில்லா
காலத்தே
தலைநகரில்
தடம் பதித்து...
நூல் பதிக்கும்
அளவுக்கு
நுணுக்கங்கள் கற்றவர்...
நிதானத்திர்ற்கு
நிகரான சொல்
உண்டென்றால் - அது
இவர் பெயராகத்தான் இருக்கும்...
தொடர்ந்து வந்த பாதையில்
இடர்ந்து கிடந்த கற்களையெல்லாம்
அழகாய் அடுக்கி வைத்து
அதன் மேலேயே - கால்
அடியும் வைத்து
உயரம் ஏறிய சிகரம்...
"திரு. மகேஷ் பாபு"

..................................................
அடுத்து வருபவர்
செட்டிநாட்டு தங்கம்...
பலரது வாழ்வை
செட்டிலாக்கிய சிங்கம்...
அனுபவித்த இன்னல்கள்
அனைவருக்கும் வேண்டாமென்று
அனுபவ செல்வாக்கை
அளவாய் பிரயோகிப்பார்...
விற்பனை பிரதிநிதியாய்
வீதியிலே சுற்றிய என்னை
வழி இதுவல்ல...
வாழ்வின் தடத்தை - என்னோடு 
வா காட்டுகிறேன்
என்றார்...
அடுத்த நாளே
அனுப்பிவைத்தார் 
தினகரன் அலுவலகத்திற்கு...
உதவும் குணத்திற்கு
உயிர் வாழும் உதாரணம்...
"திரு.ராமநாதன்"

...........................................................
மூன்றாம் மூர்த்தி
தேனி தந்த
தேனீ...
தந்தி தந்த
ஞானி...
ஊடகத்துறை
சந்து பொந்தெல்லாம் - பள்ளி
ஆசிரியர் போல
உக்கார வைத்து
சொல்லித் தந்தவர்...
புள்ளி விவரம் யாவும்
புத்தியில் புகட்டுவார்...
வாடிக்கையாளர் சந்திப்பு
என்றால் - நம்மோடு
வரிந்துகட்டி புறப்படுவார்...
தட்டியும் கொடுப்பார்
பல பேர் பார்க்க
திட்டியும் தீர்ப்பார்...
எளிமையின் இலக்கணம்
"திரு.ராஜேஷ் கண்ணன்"

............................................................
இம்மூவருக்கும்
பங்குண்டு...
இம்மாமடையனை
மெருகேற்றியதில்...
இவர்கள் மூவருக்கும்
ஒரு தொடர்புண்டு...
இந்தியன் எக்ஸ்ப்ரஸின்
முன்னாள், இந்நாள்
மேலாளர்கள்...
மும்மூர்த்திகளுக்கு என்
காலந்தாழ்ந்த
வணக்கத்தை...
உரித்தாக்குகிறேன்...

Tuesday 18 January 2011

விதவைப் பொங்கல் 2011...


காதல் மயக்கத்தில்
கதவருகே நான் நின்றால்...
காதோரம் சொல்வாயே
கவிதைகள் கண்ணாளா...

இச்சை எதுவென்று
எதை பார்த்து உணர்வாயோ...
இழுத்து அணைப்பாயே
இன்பம் தருவாயே...

போனால் ஒன்று...
வந்தால் ஒன்று...
நின்றால் ஒன்று...
நடந்தால் ஒன்றென்று...

நித்தமும்
உறைந்திடுமே...
என் சித்தம்
உன் முத்தத்தால்...

பித்தம் தலைக்கேற
பிதற்றும் எனையனைத்து 
மொத்தமும் தருவாயே
மூச்சிரைக்க மணவாளா...

இதற்காக இத்தனைநாள்
ஏங்கியதை நான் சொன்னால்
இதற்கே நான் பிறந்தேன்
என்பாயே என் கனவா...

கட்டிய தாலியில் 
இன்னும் கலர் சாயம்
போகலையே...
கட்டிய நீ ஏன் போன?

எவ்வளவோ
சொன்னேனே
இந்த வருஷம்
வேணாமுன்னு...

புள்மேடு பாதையில
திரும்பி வந்தா - வீட்டுக்கு
சீக்கிரம் வரலாமுன்னு
வந்தியா?

பேப்பர்ல உன் பெற
பாத்ததுமே...
போயிடிச்சே என்
உசுரு...

அதிர்ச்சியில கருச்சிதைவு
ஆச்சுதின்னு
சொல்லையில
நின்னே போயிடிச்சு முச்சு...

கிழிஞ்ச
துனியா
ஆயிடிச்சே
என் வாழ்க்கை...

நான் யாரை
குத்தம் சொல்ல?
எங்க போயி
முறையிட?

Wednesday 12 January 2011

கலைஞருக்கு வாய்க்கரிசி...

யானை கட்டி போரடிச்ச
காலமெல்லாம்
காணாம போச்சு...

ஏறு பூட்டி சேறுகண்ட
நேரமெல்லாம்
எங்கேயோ போச்சு...

நெல்லு கொட்டும் பத்தாயம்
நிக்குது இப்ப
நிற்கதியில...

உள்ள கொட்ட
ஒண்ணுமில்லாம உடைஞ்சே போச்சு
எங்க வீட்டு குதிரு...

படியளக்கும் வெவசாயம்
அடிவயித்தில 
அடிச்சதால...

பறவையும்
மரக்காலும் 
பரணியில கெடக்குதுங்க...

கையில உள்ள
பணத்த போட்டு
கை டிராக்டர் வச்சி உழுதேன்...

காதுல மூக்குல
கெடந்தத வச்சி
கால் வாசி பயிராக்குனேன்...

களை புடுங்க
காசில்லாம
கை மாத்து வாங்குனேன்...

புகையான் அடிச்சிதுன்னு  
பொண்டாட்டி தாலிய
அடகு வச்சேன்...

வானம் பாத்த பூமி
இன்னைக்கு
விசார்ப்புக்காக காத்து கெடக்கு...

போன மாசம் மழையால
பயிரெல்லாம்
நாசமாச்சி...

அரசாங்க கணக்கு 
ஹெக்டேருக்கு
ஐயாயிரம்...

அடகு வச்ச
தாலி மட்டும்
எட்டாயிரத்துக்கு இருக்கு...

ஏக்கருக்கு
ரெண்டாயிரம்
என்ன கணக்குனு புரியல...

எங்க ஓட்டுல ஜெயிச்சவன்
கோடி கோடியா
கொள்ளையடிக்கிறான்...

ஓட்டு போட்ட
குத்தத்துக்கு
ஓட்டாண்டியா நிக்கிறோம்...

தேடி வந்து ஓட்டு கேக்கும்
தேவி..யா மொவனுங்க
தேர்தல் முடிஞ்சிட்டா ஆளே வர்றதில்ல...

கும்பிட்டு வாசல் வரும்
கு...காரி மொவனுங்க
குளிர் காயிறாங்க எங்க வயிதேரிச்சள்ள...

நாசமா போங்கடா
நாயிக்கு
பொறந்தவங்களா...

பண்றதெல்லாம்
பண்ணிபுட்டு
பொங்கலுக்கு இலவச பொருளா?

வரவேண்டியத குடுடா
வழுக்கத்தலையா - உனக்கு
வாய்க்கரிசி நாங்க போடுறோம்...

Tuesday 11 January 2011

பொங்கலோ... பொங்கல்...

கண்ணுக்கு புலப்படும் கடவுளுக்கு - இம்
மண்ணில் விளையும் பொருள் கொண்டு
விண்ணதிர சொல்லிடுவோம்...
பொங்கலோ பொங்கல்!!!

பழையவை கழித்து புதியவை புகுத்தி
பிழைதனை திருத்திடுவோம்...
புதுமைகள் படைத்திடுவோம் - வரும்
பொன்னான நாட்களிலே...

நான்கு கால் பாய்ச்சலிலே - நம்மோடு
நாள்முழுதும் பாடுபட்ட...
கால்நடைக்கும் விருந்துவைப்போம்...
கௌரவிப்போம் அவைகளையும்...

சுற்றமும் நட்பும்..
உற்றாரும் உறவினரும் - சேர்ந்திருந்து
தைப் பொங்கல் கண்டிடுவோம் - தமிழர்
திருநாளை போற்றிடுவோம்...

Monday 10 January 2011

The Real Culprit.....


எய்தவனை விடுத்து
அம்பை குறை சொல்வது
எவ்வகையில் ஞாயம்?

உண்டு; கழித்து பின் மஞ்சத்தில்
உறவாடும் ஒருவனை
கடவுள் என்கிறார்கள்...

அறுசுவையில் ஒருசுவையை
அவளுக்கு காண்பித்தான்...
இது எங்கும் நடக்காததா?

சும்மா இருந்தவனை
சுற்றி வந்து
சிவனாக்கிய மக்களை விடுத்து...

சிவலிங்க அமைப்பிற்கு 
செய்முறை விளக்கம்
சொன்னவனை தண்டிப்பதா?

அடித்தோம் உடைத்தோம்
அவனை அல்ல
திருப்பி அடிக்காதவற்றை

சிறைக்குள் சென்றவன் - இன்று 
சிரித்துக்கொண்டே வருகிறான்
சிறு துரும்பும் நெருங்காத பாதுகாப்போடு...

முட்டாளாய் நாம் இருந்தால் 
முறைதவறி பிறந்தோரெல்லாம்
முதல்வராக கூட வளம் வருவர்...

Saturday 8 January 2011

எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப்பண்ண மாட்டோமா?

தென்னை மட்டையில்
தொடங்கினோம்...
தெருவெல்லாம்
ஆடினோம்...

ஓடுகளை 
உடைத்தெறிவோம்...
கண்ணாடிகளை
தகர்த்தெறிவோம்...

முட்டு சந்தும்
விட்டதில்லை - எங்களை
தார் ரோடும்
சுட்டதில்லை

வெற்றி தோல்வி இரண்டையுமே
பெற்று வந்தோம்..
வெல்ல வேண்டிய போட்டியிலும்
தோல்வியுற்றோம்...

பள்ளிப் பருவம் தொட்டு
இன்று வரை ஆடுகிறோம்...
பண்ணிய தவறையெல்லாம்
உடனுக்குடன் திருத்திடுவோம்...

ஏங்கிய நாட்கள் உண்டு
இனிமேல் முடியமா என்று...
இப்போது ஒரு வாய்ப்பு
எதற்க்கினி கவலை...

எதுவானாலும்
பார்த்துவிடுவோம்...
எவ்வளவோ பண்ணிட்டோம்
இதைப்பண்ண மாட்டோமா?

Friday 7 January 2011

I Love You...

தேன் குடிக்கும் தருணம்
தெரிகிறது வண்டிற்கு...
அதை கொடுக்கும் நேரம்
புரிகிறது பூவிற்கு...

என்னவளின் எண்ணம் எனக்கு
புரியவுமில்லை...
என் காதல் சொல்லும் நேரம்
தெரியவுமில்லை...

ஐந்தறிவு ஜீவனுக்கு
சொல்லாமல் புரிகிறது ...
ஆறாம் அறிவை பெற்றும் நானோ 
ஈரான்டாய் தவிக்கிறேன்...

இன்றைக்கு சொல்லவேண்டும் - என
என்றைக்கோ முடிவு செய்தேன்...
இன்று வரை சொல்லவில்லை
என்று சொன்னால் நம்புவீரா?

பலமுறை ஒத்திகை பார்த்து
பகல் நேர கனவு கண்டு
விதவிதமாய் சொற்கள் கொண்டு
விவாதிக்க தயாரானேன் - என் காதலை...

அவள் முகம் பார்க்கையிலே
அத்தனையும் மறந்துபோகும்...
நினைத்துவந்த கவிதை யாவும்
பிணைத்து கொள்ளும் ஒன்றோடொன்று...

அவளே புரிந்துகொள்வாளென 
நினைத்திருந்தேன்...
அவள் நினைவை உள்ளே வைத்து
தவித்திருந்தேன்,,,

பித்தனாகி புலம்பும்போது
பின்னால் நின்றாள்...
பிதற்றாதே புலவா என
முத்தம் தந்தாள்...

இன்றும்  சொன்னதில்லை
"நான் உன்னை காதலிக்கிறேன்" - என்று...
மென்று முழுங்குவேன்
என்றவளுக்கு தெரியும்போல...

மனிதர் உணர்ந்து கொள்ள...
இது மனிதக் காதலல்ல...
பூவும் வண்டும் போல
புதிரானது எங்கள் காதல்...

இவ்வுலகிலேயே அழகான
பூ அவள்...
வேறு பூ தேடாத
வண்டு நான்...

Thursday 6 January 2011

கலைமாமணி!!! ஞானபாரதி!!!

கடவுள் வாழ்த்து...
ஆத்தி சூடி,
இளம்பிறை அணிந்து;
மோனத்திருக்கும் முழுவென்மேனியன்...
கருநிறம் கொண்டு - பாற்கடல்
விசைக் கிடப்போன்...
முகமது நபிக்கு
மறையருள் புறிந்தோன்...
இயேசுவின் தந்தை...
எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே
உணர்ந்து உணராது...
பரவகையாக பரவிடும்
பரம்பொருள் ஒன்றே...
------------------------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து...
கதிர் வெடித்து
பிழம்புவிட...
கடல் குதித்து
சூடாற்ற...

முதுமை மிகு
நிலப்பரப்பில்...
முதல் பிறப்பு
தோன்றிவிட...

நதி வருமுன்...
மணல் சருமுன்...
பதி மதுரை பெருவழியில்...
பாண்டியர் கை பார்த்தவளே...

நின்னை யான் வணங்குவதும்...
நீ என்னை வாழ்த்துவதும்...
அன்னை மகற்க்கிடையே
அழகில்லை என்பதனால்!

உன்னை வளர்த்துவரும்
உன்புகழ் சேர்...
தென்புலவர் தம்மை வாழ்த்துகிறேன்...
தமிழ் புலவர் வாழியரோ!!!
------------------------------------------------
கலைமாமணி! ஞானபாரதி!
வலம்புரி ஜான் அவர்களின்
வைர வரிகள் இவை...
இவரின் கர்ஜனை முடிந்தால்
அவையை கரகோஷம் உடைக்கும்...
ஆங்கிலம் பிரஞ்சு என்று
பலமொழிகள் அறிந்தாலும்...
அண்ணாச்சியின் தமிழ் மோகம்
அவையோருக்கு தீர்க்கும் தாகம்...
"
தன் தாய்மொழிக்கு
தலை வணக்கம் செலுத்தாத
எந்த நாடும் வாழாது...
எந்த சமுதாயமும் வாழாது..."
என சொல்லி!
தமிழர்கள் நெஞ்சத்தில்
தனக்கென இடம்பிடித்தார்...
இந்த நாள் இனியனாலென்று - இவர்
வந்த நாளெல்லாம் இனிதாயிற்று...
இளந்தமிழ் சுவைகொண்டு...
கலந்தாட அவைகொண்டு...
சிலேடையும் சிந்தனையுமாய்...
சிந்தையுள் தோன்றியவற்றை  
சிம்மக்குரல் கொண்டு
சீர்மிகு உச்சரிப்பால் 
பாட்டுக்கள் பல சொன்னார்
பார்போற்ற போய் சேர்ந்தார்...
எத்தனை புத்தகங்கள்...
எவ்வளவு மேடைகள்...
பாராளுமன்ற படையெடுப்பு...
போப் ஆண்டவருக்கு மொழி பெயர்ப்பு...
இப்படி
திக்கெட்டும் தமிழ் முழங்கிய 
வலம்புரி சங்குக்கு...
தலை வணங்கி நாம் சொல்வோம்
தமிழ் வணக்கம் இன்று...