Tuesday 25 January 2011

உன்னைப்போல் ஒருவன்...

காகம் 
இறந்துபோனால்
கலவரமாகுது - எங்கள்
மொட்டைமாடி...

நாயொன்றின் 
உயிர்பிறிந்தால்
நள்ளிரவு நண்பர்களின்  
ஒப்பாரி...

ஓலைப்பாம்பொன்று
உயிர்துறந்தால்
ஒட்டுமொத்த பாம்புகளின் 
அணிவகுப்பு...

எறும்புகூட
தன் துக்கத்தை
இயல்பாய்
வெளிப்படுத்தும்...

காக்கைக்கும்
நாய்க்கும்
எறும்புக்கும்
உள்ள குணம்...

தமிழனுக்கு
ஏனோ இன்னும்
தட்டுப்படவே
இல்லை...

தனது இணம்
வேரருக்கப்படுவதை
எந்த இனமாவது
பார்த்து ரசித்ததுண்டா?

கண்ணாற
கண்டோம்...
காதாற
கேட்டோம்...

இலங்கையில்
நடந்ததை
இறையாண்மை
என்றோம்...

இந்த மண்ணில்
நடக்கும்போது
எதைசொல்லி
தவிர்ப்போம்...

மாணவன்
தாக்கப்படுவான்
என்றதும்
பொடா பாய்ந்ததே...

எங்கள் மீனவன்
தாக்கப்படும்போது
ஏன் எதுவுமே
பாய்வதில்லை?

மனித உரிமை
கழகமென்ன
மன்னையா
தின்கிறது?

மந்திரி பதவிக்கு
மட்டும்
டெல்லிக்கு போகும்
தந்திரக் கிழவன்...

தமிழன் உயிரென்றால்
தந்தியும் கடிதமும்
அனுப்புவானாம்?
அதை மத்திய அரசு ஏற்க்குமாம்... 

முத்துக்குமாரின்
மரணத்தை அரசியலாகினார்களே...
ஏன் மீனவன் சாவை
கையிலெடுக்கவில்லை...

கேட்டுகொண்டே போக
கேள்விகள் ஆயிரமுண்டு...
கேட்கும் யோக்கியதை
எனக்கென்ன இருக்கிறது...

நானும்
உங்களைப் போல்
ஒருவன் தானே...

- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment