Wednesday 20 April 2011

குறும்படம்...


வீதியெல்லாம் பட்டாசு சத்தம்!
விண்ணதிர வாணவேடிக்கைகள்!
ஊரே கொண்டாட!
ஒருவன் மட்டும் தனித்திருந்தான்...
வழிமேல் விழிவைத்து
...இருவிழியும் பூத்திருந்தான்....

விளக்கும் வைத்தாயிற்று
வரவில்லை அப்பா...
கட்டம் போட்ட சட்டை!
கருப்பு கலர் பேன்ட்!
மத்தாப்பு பெட்டி!
மிரளவைக்கும் சரவெடி - இன்னும்
எத்தனையோ வருமென நம்பி
ஏங்கியவன் தூங்கிவிட்டான்...

பொழுதும் புலர்ந்தது
பண்டிகையும் நாளும் மலர்ந்தது....
கட்டம் போட்ட சட்டையுமில்லை
கருப்பு கலர் பெண்ட்டுமில்லை...
அப்பாமட்டும் அமர்ந்திருந்தார்
அவர் மடியில் பணமுமில்லாமல்....

அழுது புரண்டான்
அடுத்த நாள் பள்ளிக்கு
அனைத்து நண்பர்கள்;
புது துணியோடு
பள்ளிக்கூடம் வருவார்களே...
அது ஒன்றே அவன் கவலை....

புதியதைப்போல
இருந்தது ஒரு சட்டை...
பிழைத்துக்கொள்ள
பிறந்தது யோசனை....
ஊதுபத்தி துணையோடு
ஒட்டைபோட்டான் சட்டையிலே...

பட்டாசு பட்டதனால்
புதுசட்டை போனதென்று!
பள்ளியில் அனைவருக்கும்
புதியதோர் கதை சொன்னான்...

பண்டிகைகள் வந்தாலே
பாவிப் பய மக்க...
பலபேர் இப்படித்தான்
பணங்காசு இல்லாம
பிதுங்குது இருவிழியும்
பதுங்குது இல்லதுள்ளே...

பெத்ததுக்கு கூட
பொருள் சேர்க்க முடியல...
பெத்துக்காமலும்
இருக்க முடியல...

பசியிலும் பாலுணர்வு
பிறப்பது சுகமென்றாலும்?
பசியில் அழுவும்
குழந்தையைக் காண்கையில்
பெற்றோரையே வசைபாட
பலநேரம் வாய்துடிக்கும்...

இயற்கைக்கும்!
இறைவனுக்கும் கூட!!
படைப்பதில் பிழை
தவிர்க்க முடியாது போல!!!

No comments:

Post a Comment