Friday 4 March 2011

22/1 ஆண்டவர் நகர், 3 ம் தெரு, கோடம்பாக்கம்.

மகிழ்ச்சியின் முகவரி
யாதெனக்கேட்டால்?
மனமார சொல்வேன்
இதுதானென்று...

ஆம்!
மகிழ்ச்சியின்
மற்றொரு பரிமாணத்தை
எங்களுக்கு சொல்லித்தந்தது
அந்த வீடு...

அங்ஙனம் உண்டு
உடுத்தி, உறங்கி,
உழன்றதனால் வீடென்றே
எழுதளுற்றேன்...

உண்மையில் வீடல்ல அது...
சிகரமேற நினைத்து;
தன் கூடுவிட்டு பறந்து வந்த;
சிட்டுக்குருவிகளின் பட்டுக்கூடாரம்...

வாழ்வின் இலக்கணத்தை
வாரித்தந்த போதிமரம்...
சின்னச் சின்ன அறைகள் கொண்ட
செட்டியார் பில்டிங்...

வண்ண வண்ண
கனவுகளோடு வாழ்வு தேடிய...
இயக்குனர்கட்க்கு!!!
அள்ள அள்ள கதைகள் தந்த
கலைக்களஞ்சியம்...

இயக்குனர் சேரனும்
இன்னபிற ஆட்களும்
இங்குதான் வாழ்ந்ததாக
கேள்வி...

பிரம்மச்சாரி விடுதியின்
அத்தனை சாராம்சமும்
சற்றும் குறையாமல் இருக்கும்...

இளைப்பாறவும்...
இமை மூடவும்...
இன்றுவரை அமையவில்லை
இதுபோன்றொரு இருப்பிடம்.

கொளுத்தும் கோடையும்;
குளுமையே எங்களுக்கு.
கொட்டிக்கிடக்குது ஞாபகங்கள் - கொள்ளை
அடிக்கமுடியா பொக்கிஷங்கள்...

ஒவ்வொரு நிகழ்வும்,
ஒவ்வொரு அனுபவம்...
நினைத்துப்பார்த்தால்?
நெஞ்சுக்குள் பூமழை...
நெகிழ்ச்சி மிகுதியால்?
கண்ணுக்குள் ஓர் அலை...

கையில் பணமிருக்காது - ஆனாலும் 
புன்னகைக்கு குறைவிருக்காது...

நான்கு ருபாய்
அன்றிருந்தால்?
இரண்டு கட்டு பீடியோடு
தொடரும் எங்கள் ராக்கூத்து...
விடிய விடிய சீட்டாட்டம்...
வீட்டுக்குள் மேகமூட்டம்...

காதல் கதைகளும்
மாண்டதுண்டு!!!
காமன் கணைகளும்
பாய்ந்ததுண்டு!!!

எனது இறுதி மூச்சும் சொல்லும்
நன்றிகள் கோடி...
கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்காத நண்பர்களை தந்ததற்கு!!!

வரலாறு படைத்த கட்டிடம்
தரைமட்டமாக்கப்பட்டு;
ஐந்தாண்டுகள் ஆகிறது...
புதுக்  கட்டிடமாக
பிரவியொன்றை எடுக்கிறது.
புதிய வரலாறு எழுத...

- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment