Monday 30 July 2012

... அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா...

வள்ளுவர் கோட்டம்
வாகன நேரிசலானால் - சுற்றி
வளைத்து செல்ல
சாலைகளா இல்லை?

வண்டியை திருப்பு
வலக்கையை முறுக்கு
வந்துவிடப்போகிறது
வடபழனி!!!

நீ செல்லும்
சாலையில் - பூஞ்
சோலை ஒன்றிருக்குமே?
அதையும் பார்த்துவிட்டு போ...

சோலையை விட்டு
சாலையை கடக்கும் - அந்த
பட்டாம்பூச்சியை பார்க்கையில்
தலைகோத மறவாதே...

அளவாய் இடைவெளிவிட்டு
அழகாய் ஊர்ந்துசெல்லும்
கார்களின் இடுக்கில் சொருகி - உந்தன்
சாகசத் திறமையை காட்டு...

இவையாவும் முடித்து - நீ
இல்லம் நுழையும்போது;
எவரேனும் சொல்லக்கூடும்!

வள்ளுவர்கோட்டத்தில்
வயதான உன்தந்தை
மயங்கி விழுந்ததையும் - சிலர்
மீட்டு வந்ததையும்!!

சந்து பொந்துகளை
தெரிந்துவைத்து என்ன பயன்?

சாகசம் காட்டி
சாலையில் சென்று - நீ
சாதிக்கப்போவதுதான் என்ன?

No comments:

Post a Comment