Monday 30 July 2012

...பூ...

விதையின்றி
வேரின்றி
செடியின்றி
பூக்கும் பூவை
யாருக்கேனும் தெரியுமா?

வெயிலையும்
மழையையும்
பொருட்படுத்தாது...

வெட்ட வெளி
பொட்டல்களை
விளை நிலங்களாக்கி!

வெட்டிபேச்சு
வீணருக்கும்;
விரட்டியடிக்கும் - இவ்
உலகுக்கும்;
உணவளிக்கிறானே!

அந்த
உழவன்
உடம்பில்
உலரும் பூ...

உதிரம்
உருகி
மலரும் பூ...

பூப்பது
ஓரிடத்தில்!
காய்ப்பதும்
கனிவதும் வேறிடத்தில்!!

உற்பத்தியாளன்
ஊழியத்திற்கு;
விற்பனையாளன்
ஊதியம் தேடுதல்!

உலகம் உருவான
காலம் தொட்டு;
நீயும் நானும் பார்க்க
நிகழும் நிதர்சனம்...

காரணத்தை
சிந்திப்போம்!
பூக்குமிடமே
காய்க்கட்டும்!!

உழைப்பாளர்
வாழ்வு
சிறக்கட்டும்!!!

அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்...

-பத்மா சுவாமிநாதன் 

No comments:

Post a Comment