Monday 30 July 2012

...கேள்வி...

வழக்கமான
அலுவல்கள் முடித்து;
வாடிக்கையான - அந்த
கடையில் தேநீர் அருந்தி...

திருமங்கலம்
தாண்டியதும்
தடைபட்டது பயணம்...

வாகனத்தின்
விசை நரம்பு(Accelerator Cable) - தன்
ஆயுட்காலம் முடிந்து
அறுந்தேபோனது...

நல்லவர்களை
சோதிக்கும் ஆண்டவன் - என்னை
தவறாகப் புரிந்துகொண்டார் போலும்!

அடுத்த
அரை மணிநேரத்தில்
எடுக்க ஆயத்தமானது வண்டி!
இயந்திரக் கைவினைஞர் (Mechanic)
அய்யனார் தயவால்...

வீறுகொண்டு
கிளம்பிய - எந்தன் வாகனம்;
மீண்டும் நிறுத்தப்பட்டது
திருமுல்லைவாயல்
அருகே...

சட்டம் ஒழுங்கு
காவலர்கள்!
தம் பணியை(?)
செவ்வனே
செய்துகொண்டிருந்தனர்...

மரியாதை நிமித்தம்
கீழிறங்கி;
ஓட்டுனர் உரிமம்
பதிவுச் சான்றிதழ்
காண்பிக்கப்பட்டன...

வேலைசெய்யுமிடம்
வீட்டின் முகவரி யாவும்
கோரப்பட்டதின் பேரில்
கொடுக்கப்பட்டன...

நான் சார்ந்த
நிறுவனத்தையும்
பதவியையும் கேட்டுக்கொண்டவர்
மரியாதையாகவே வினவினார்
அது என்ன சார்
"ஸ்டாப் டெத் பெனால்டி" என்று?
(வண்டியில் எழுதியிருக்கும் வாசகம்)

மரண தண்டனைக்கெதிரான
மக்கள் இயக்கத்தைப்பற்றியும்
அதன் மீதான எனது
கருத்தையும் சொன்னேன்...

நேரம் நீ...................ண்டது
வசூலுக்கு இடையூறாக
இருந்த என்னை;
உசாராகவே அனுப்ப முயன்றார்
அந்த ஆண் காவலர்...

உடனிருந்த
பெண் காவலர்
சொன்னதுதான்
சற்று அடடே ரகம்...

சாருக்கு சமூக சிந்தனை
ரொம்ப அதிகமோ?
என்றார்!

அது என்
உரிமை என்றேன்...
மறுபேச்சுக்கு வழியில்லை!

பொத்திக்கிட்டு
போறவன்தான்
பொதுஜனம்!
என்று நினைக்கிறார்களா?

அல்லது
சாமானியனுக்கு
சமூகம் பற்றிய சிந்தனை
ஏனென்று எண்ணுகிறார்களா?

என்னை
தூங்கவிடாத
கேள்வி?
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment