Thursday 28 June 2012


மானுடம் என்பது...


ஆளில்லா வழித்தடத்தில்
அன்புக்குரியவளைக்
கட்டியணைக்க
காட்டும் அவசரம்...

காமசூத்திரக் 
கலையனைத்தும் 
கட்டியவளிடம் காட்டத்
துடிக்கும் ஆர்வம்...

ஈன்ற குழந்தையின் 
எச்சில் சோற்றை
உச்சுக்கொட்டி சுவைக்க 
ஏங்கும் ஆவல்...

போட்டியாளனைப்
பின்னுக்குத்தள்ளி
வெற்றி பெற்றிட
உந்தும் வெறி...

பொறுப்புகளை முடித்து
விரைவாய் இளைப்பாற
இயற்றும் வரைவு - அதனோடு
இயங்கும் செயல்... 

இவற்றோடு
நின்றுவிடுவதில்லை
இப்பிறப்பின் நோக்கம்!

கண்முன்னே நிகழும்
கொடுமைகள் கண்டு
குரலெழுப்பாத நீயும்;
கள்வர்களைக் கண்டு
குரைக்காத நாயும் ஒன்றே!!

பிறகு
உனக்கெதற்கு 
ஆறறிவு;
ஆராய்ந்து பார்த்து
அழிவைத்தரவா?

No comments:

Post a Comment